

மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் திறக்கப்பட்டு நான்கு ஆண்டுக்கு மேலாகியும் தமிழ் மொழி வளர்ப்புக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை. உலகத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துத் தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் துணை இயக்குநர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது மதுரைக்கிளை உயர் நீதிமன்றம் நீதிமன்றம்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை தமிழ்ச்சங்கத்தின் துணை இயக்குநர் நேரில் ஆஜராகி, “புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 60 நாடுகளில் தமிழர்கள் உள்ள நிலையில் அத்தகைய தமிழர்களின் தமிழ் வளர்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக மதுரை உலக தமிழ்சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது மதுரை உலக தமிழ் சங்கத்தில் 26 ஆயிரத்து 35 நூல்கள் உள்ளன. இதற்காக அரசிடம் எவ்வித நிதியும் பெறவில்லை. பதிப்பிக்கும் நூலின் ஒரு நகலை, பதிப்பாளர் உலகத் தமிழ் சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இத்தனை நூல்களும் பெறப்பட்டுள்ளன.
2017- 18ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் சங்கத்தில் நூலகத்தை அமைப்பதற்காக ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புத்தகங்களை வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில், திட்டம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில், அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத திட்டங்களைக் கணக்கிட்டால் அது, கணக்கீடு செய்யாத அளவில் இருக்கும்” என குறிப்பிட்டனர்.
மனுதாரர் தரப்பில் கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.