யுவ புரஷ்கார் விருது பெற்ற ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ கவிதை நூல் குறித்து -அமிர்தம் சூர்யா

1 0
Spread the love
Read Time:11 Minute, 32 Second

“கவிஞர் ப. காளிமுத்து எழுதிய ‘தனித்திருக்கும்  அரளிகளின் மதியம்’ என்ற கவிதை நூலூக்கு சாகித்ய அகாதெமியின் ‘யுவ புரஷ்கார் 2022’ விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எனக்குப் பெருமிதம். ஏனெனில் அந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதியிருந்தேன். நான் அறிமுகப்படுத்திப் பாராட்டிய கவிஞனுக்கு மத்திய அரசு இலக்கிய விருது எனில் அதில் எனக்கு மகிழ்வு. அதைக் கொண்டாடுவது என் கடமை” என்று பதிவிட்டுள்ளார் கவிஞர் அமிர்தம் சூர்யா.

அவரின் பதிவு விரிவாக இங்கே…

கவிதை என்பது யாதெனில் என்ற கேள்விக்கு பிரேமிள் ‘அதுஒருதியானம்’ என்றார். இன்குலாப் ‘அதுவொரு போர் கருவி’ என்றார். ரமேஷ் பிரேம் ‘அது புனைவுகளின் அரசியல்’ என்றார். பழமலய் ‘அது ஒரு வாழ்வியல் ஆவணம்’ என்றார். தேவ தச்சனோ ‘அதுவொரு மாற்று மொழிக் கணிதம்’ என்றார். பிரம்மராஜனோ ‘கவிதை படிமங்களின் வெளிப்பாடு’ என்றார்.

இவ்வளவு தீர்க்கமாய் எனக்குச் சொல்லத் தெரியாது. எனது உடல் இலக்கியமென்றால் கவிதை ‘நாளமில்லா சுரப்பி’. இலங்கை வழக்கில் ‘அகம் சுரப்பி’. ஆம், வளர்சிதை மாற்றத்தையும் அதுதான் முறைப்படுத்தும். இதயத்தை இயங்கத் தூண்டுவதும் அதுதான். இனப்பெருக்கத்தை சரி செய்வது அதுதான். ஒரு பால் இனத்தை முழுமையாக்குவது அதுதான். அது எந்த நாளத்திலிருந்தும் சுரப்பது இல்லை. சுரக்கும். ஆனால் மூலம்தெரியாது. கவிதையும் அப்படித்தான்.

என்னை முழுமையாக்குகிறது. என்னை நானாக உணரவைக்கிறது. கவிதை எனக்கு அகம் சுரப்பி. என்னைப்போல ஒருவன் கவிதையின் மூலம் முழுமையான மனிதாக என் முன் நிற்கும்போது அவனை… அந்தக் கவிஞனைக் கொண்டாடுகிறேன்… பிறர்க்கு அறிமுகப்படுத்து கிறேன்…ஆவணப்படுத்துகிறேன்…

இந்த முறை என் அகம் சுரப்பி அறிமுகப்படுத்துவது ப.காளிமுத்து… என் அன்பு நண்பன் கவிஞர் அம்சப்ரியாவின் அறிமுகம்… ஆகச் சிறந்த கவிஞன். என் நண்பன்… அவர் அறிமுகம் சோடை போகுமா என்ன?

ப. காளிமுத்து

‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ நூலை இரவில் வாசிக்கத் தொடங்கியதும் எனது இரவு புலரத் தொடங்கியது. இந்த அரளி விஷம் இல்லை. வாழ்வின் உன்னதத்தைக் காட்டும் அற்புதம்.

அதில் சில உங்கள் பார்வைக்கு…

சிறு நிலம்

கொஞ்சம் தீனி

பரிவு நிழல்

பசி தீர்க்க அவகாசம்

என்று எழுதிவிட்டு அடுத்த வரியில் ‘பேரும் அதிர்ச்சியோடு ஒரு வேடனும்’ என்று காளிமுத்து வால் பக்கம் 97ல் எழுத  முடிகிறது.

நான்கு அம்சங்களை அளித்துவிட்டு பிறகு ஏன் கூடவே வேடனையும் இயற்கை தீர்மானிக் கிறது. அல்லது மனிதன் தீர்மானிக்கிறான் அல்லது பறவையின் புத்தியில் வேடனும் இருக்கிறான் அல்லது வேடனே இந்த நான்கையும் வேட்டையின் பொருட்டு அமைத்துத் தருகிறான் என்றெல் லாம் தோன்றியது.

வனத்தில் ஊறும் நாகத்தின் வாழ்க்கை சவாலும் ஆயுசும் வானத்தில் பறக்கும் கருடனால் தீர்மானிக்கப்படுகிறது என்ற சிந்தனையைத்தான் இந்தக் கவிதை வரி வேறொரு வகையில் சொல்கிறது எனலாம். அந்த நாலு வரி நம்மை நாலாபுறமும் சிந்திக்க வைக்கிறது.

பக்கம் 94ல் காதலி ஒரு இலையில் தமது பெயரை எழுதித் தருகிறாள். அது அவனுள் மரமாகிறது. ஆம். இலை மரமாகிறது. சாத்தியமா இக்கற்பனை? காதலில் எல்லாம் சாத்தியம். உண்மையில் குட்டிபோடும் இலை என்று ஒன்று உண்டு. அந்தச் செடியின் இலையை மண்ணில் வைத்து மூடி னால் வேர் பிடித்துச் செடியாகும். இல்லாததை எந்தக் கவிஞனும் எழுதியதில்லை. அது கற்பனையென்றாலும் இல்லை என்பதாகாது. அது நடக்க கொஞ்சம் கால தாமதம் ஆகும். அவ்வளவே. காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம். அப்போது  நேரிடையாக ஒளிபரப்பு செய்யும் அந்தக் கருவி ஏதும் தமிழகத்தில் இல்லை.. கவிஞன் காளிமுத்துவும் அந்தப் பரம்பரைதானே. அதான் இப்படி கற்பனை செய்ய முடிகிறது. அது ‘எக்கிளை காணினும் உதிரவே உதிரா இலைகள்’  என்ற வரியில்  லயித்துப் போனேன். வாழ்வில்

எத்தனை பேர் கடந்து போனாலும் கிளை போல் வாழ்வில் பலர் முளைத்தாலும் அந்த இலைகள் உதிராது என்கிறார் கவித்துவமாக.

காதலென்ற சொல்லைப் பயன்படுத்தாமலேயே காதலை பேசி வாசகனுக்கு காதலை கடத்துவது தான் சிறந்த கவிஞனுக்கு அழகு. காளிமுத்து சிறந்த கவிஞன் தான். பக்கம் 17ல் ‘தொட்டி மீன்கள் யாருக்குச் சொந்தம்?’ என்ற கவிதையில்

‘ நான் என்னைப் பார்த்தேன்.

2000 நான் ஒரு கவிதையில்

தீபாவளியில் பட்டசு வெடிக்க பயம்..

எதிர் வீட்டில் பட்டாசு வெடிக்கிறார்கள்.

நானும் பார்க்கிறேன் நெருப்பு

வைத்தவனும் ஓடி வந்து

என்னைப் போல் காதை மூடி பார்க்கிறான்.

வெடியின் பெரும் சத்தம்

அந்தச் சத்தம் யாருக்குச் சொந்தம்?

பட்டாசில் தீ வைத்ததை

தவிர வேறு என்ன ?

என்னைப் போலவே அவனும்

தூரத்தில் ஒதுங்கி

அந்தக் காட்சியை

அந்த சப்தத்தைக் கேட்கிறான்

தொட்டி மீன் வளர்ப்பவனும்

ரசிக்கிறான்

பார்வையாளனும்

ரசிக்கிறான்

மீன் இருவரையும்

சமமாக பார்க்கிறது

இந்த மீன் யாருக்கு சொந்தம்?

என்ற காளிமுத்துவின் கேள்வி சபாஷ் போடவைத்தது.

பக்கம் 34ல்

நட்சத்திரங்களை  சேமித்து வந்து

போர்வைக்குள் வைத்து

இரவில்

அதை யாருக்கும் தெரியாமல்

ரசித்துக்கொண்டிருக்கிறான்

காலை விடிந்தது என்று

வீட்டில் உள்ளோர்

‘டேய் டைம் ஆச்சி’ என்று

இது என் யூகம்

யாரோ வெடுக்கென்று

போர்வையை இழுக்கிறார்கள்

இப்போது நான்

என் நட்சத்திரங்களை

இழந்தேன் என்றால் அது கவிதை.

காளிமுத்து அப்படி எழுதாமல் நட்சத்திரங்களை எல்லாம் இழந்து வெற்று வானமானேன் என்று முடித்து அதை ஆகச் சிறந்த கவிதையாக்கிவிட்டார்.

தானே வானமாவது தான் கவித்துவம். இப்பொழுது பொழுது விடிந்துவிட்டது  வானில் நட்சத் திரம் இருக்காது என்ற யதார்த்ததை  சேர்த்தே இந்தப் புனைவில் கட்டுகிறார்.

பக்கம் 35ல் விடிந்துவிட்டது என்று வரிசையாகப் பட்டியல் இடுகிறார் காட்சியை. கடைசியில் ‘மருதய்யா இன்னும் எழவில்லை’ என முடிகிறது கவிதை. அதிலொரு மெளனம். அந்த மெளனம் தான் வாசிப்பவனிடத்தில் அந்த வீட்டில் மரணம் என்று வாசகனை எழுத வைக்கிறது. ஆயினும் மரணம் பற்றிய கவிதை அது இல்லை எனவும், வாதாடமுடியும். மெளனங்களால் வாசகனை எழுத வைப்பது எழுத்து கலையின் வெளிப்பாடு. அதிலும் ஜெயிக்கிறார் காளிமுத்து.

பக்கம் 42ல்

அது வேடன் வீடுதான்

எனக்கும் தெரியும்

பறவைக்கும்தெரியும்

பிறகு ஏன் கீச்சிடுகிறது என்று தான்

தெரியவில்லை

என்கிறது கவிதை. அது தன்னை இழக்கத் தயாராகிவிட்டதா? தன் வாரிசு அந்த வேடன் வீட்டி லுள்ளதா? தன் இனம் அங்கு சிக்கி உள்ளதா? அல்லது அது வேடனின் வளர்ப்புப் பறவையா? எதுவும் தெரியாது. காரணம் பறவையின் பாஷை யாருக்கும் தெரியாது. இப்படி வாசகனை யோசிக்க வைக்கும் நேரிடையாக அவனுக்கு புட்டி பால் ஊட்டாத கவிதையே சிறந்த கவிதைக் கான அடையாளம்.

57ல் ‘காகங்கள் பற்றிய புனைவு’. பக்கம் 62, 64 பக்கங்களின் கவிதை குறித்து நிறைய பேசலாம். அப்புறமிது கவிதைக்கான கோனார் உரையாகிவிடும்.

கவிஞர் ப. காளிமுத்து எழுதிய இந்த முதல் கவிதைத் தொகுப்பு வளர்ந்த ஒரு கவிஞனின் அத்தனை அம்சங்களையும் (மொழிதலாலும் வெளிப்பாட்டு முறையிலும்) பெற்றிருக்கிறது. இவர் கவிதை மொழி சிக்கலற்றது. வாசகனை நீர் சுழல்போல் தனது மொழி சுழலில் மாட்டி வைத்து தன் திறன் காட்டும் பிற கவிஞர் போல் அல்லாமல், விடாமல் கை பிடித்து கதை சொல்வதைப் போல அழைத்துச் செல்வது. நாம் பார்த்த அதே காட்சி பாடுபொருளைத் தனது கவிதை கலைடாஸ் கோப்பில் போட்டு புது கோணத்தை, புது பரவசத்தைக் காட்டுகிறார்.

இவரது கவிதையில் இருக்கும் மெளனம்தான் இவரது சிறப்பு. அது வாசகனை புத்திசாலியாக மதித்து அவனின் மூலமாகத் தன்னையும் உயர்த்திக்கொள்கிறார். சமீபத்தில் நான் படித்த சிறந்த கவிதைத் தொகுப்பு இது.

வாழ்க நண்பா… தொடர்ந்து எழுதுங்கள்… எழுத்து ஒரு வரம்

அதைப் பெற்ற தாங்கள் ஒரு அதிர்ஷ்டசாலிதான். வாழ்த்துக்கள்.

  • கவிஞர்  அமிர்தம்சூர்யா
Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
25 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
25 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!