
“நடிகர் மாதவன் இயக்கி, நடித்த ‘ராக்கெட்ரி’ திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட 90 சதவிகிதத் தகவல்கள் பொய்யானவை” என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான பான் இந்தியா திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’. இந்தப் படத்தின் கதை இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடித்திருந்தார். நாயகியாக சிம்ரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்து பேசிய நடிகர் மாதவன், “விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டது” என்றார்.
இந்த படம் லாபநோக்கத்தில் வெற்றி பெற்றாலும் சர்ச்சையைச் சந்தித்துள்ளது.
“நடிகர் மாதவன் இயக்கி, நடித்த ராக்கெட்ரி திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட 90 சதவிகித தகவல்கள் பொய்யானவை” என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகளான ஏ.இ.முத்துநாயகம், ஈ.பி.எஸ்.நம்பூதிரி, சசிகுமாரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த படம் குறித்து திருவனந்தபுரத்தில் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
“நாராயணன் பல ஆண்டுகளாக பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். நாராயணன், படத்தில் தெரிவித்திருக்கும் தகவல்களின்படி பொதுமக்களைத் தவறாக வழிநடத்தப்பட்டதாகத் தெரிகிறது. நாராயணன், திரைப்படத்திலும், ஊடகங்களிலும் பொய்யான தகவல்களை தெரிவித்து இஸ்ரோ மற்றும் விஞ்ஞானிகளை அவமானப்படுத்தி இருப்பதால் சில விஷயங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம். நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டதால் கிரையோஜெனிக் வளர்ச்சியில் தாமதம், நாட்டிற்குப் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாக அவர் தகவல் பரப்புவது தவறானது. இஸ்ரோ 1980-களில் மத்தியில் திரவ உந்துவிசை ராக்கெட் இன்ஜினான கிரையோஜெனிக் உருவாக்கும் பணியை தொடங்கியது.

ஈ.பி.எஸ்.நம்பூதிரி தலைமை தாங்கிய திட்டத்தில் நாராயணனுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் நாராயணனின் பணிகள் எதுவும் கிடையாது. விகாஸ் இன்ஜினுக்குப் பின்னால் நாராயணன் இருந்தார் எனக் கூறுவது தவறானது. ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் தவறை நாராயணன்தான் திருத்தியதாகத் திரைப்படத்தில் நாராயணன் கூறியிருக்கிறார். அதுவும் முற்றிலும் தவறானது. இது குறித்து நடவடிக்கை எடுக்க இஸ்ரோ தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றனர்.
ராக்கெட்ரி படத்தில் கூறப்பட்டுள்ள தகவல் அனைத்தும் பொய் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.