

திருமலை நாயக்கர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தீவிரமான பக்தன். தினந்தோறும் ஆண்டாள் கோவில் உச்சிகால பூஜையை முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூஜை மணி ஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார். அதில் ஒரு மண்டபம் ஸ்ரீவில்லிபுத்தூர் – மதுரை சாலையிலுள்ள பூவாணி கிராமத்தில் உள்ளது. 450 ஆண்டுகால பழமை வாய்ந்தது இந்த மணிமண்டபம். இதுதான் அழியும் நிலையில் உள்ளது. அரிய யானை சிற்பங்கள் பூமிக்குள் புதைந்து கிடக்கின்றன.
தூண்களில் உள்ள அற்புதப் புடைப்புச் சிற்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. அரசு கண்டுகொள்ளுமா என்கின்றனர் அவ்வூர் மக்கள்.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் திருமலை நாயக்கர். முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக இவர் கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு. முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் இவரின் தம்பியான திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டி நாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது.
தமிழக மக்கள் மறவாது நினைக்குமாறு மதுரையை விழா நகரமாகவும், கலைநகரமாகவும் மாற்றியமைத்தார் திருமலை நாயக்கர். இவர் கட்டடக்கலை உள்ளிட்ட பல கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். பழைய கோயில்களைத் திருத்தி அமைத்தார். திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. புதுமண்டபம் கட்டி முடித்த பின்னர், இவரால் தொடங்கப்பட்ட ராஜ கோபுர கட்டடப் பணி முற்றுப் பெறாமலேயே உள்ளது.
அப்படிப்பட்ட கட்டடக்கலைக்குப் பேர்போன திருமலை நாயக்கரால் ஸ்ரீவில்லிபுத்தூர் – மதுரை சாலையிலுள்ள பூவாணி கிராமத்தில் கட்டப்பட்ட 450 ஆண்டுகால மணிமண்டபம் அழியும் நிலையில் உள்ளது.
அங்குள்ள படிக்கட்டுகளில் உள்ள அரிய யானை சிற்பங்கள் பூமிக்குள் புதைந்து கிடக்கின்றது. தூண்களில் உள்ள அற்புதப் புடைப்புச் சிற்பங்கள் சிதைந்துகொண்டிருக்கின்றன. திருமலை நாயக்கர் கட்டிய அரிய கலைப் பொக்கிஷமான இந்த மணிமண்டபத்தை சீரமைத்து அரசு பாதுகாக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்களும் ஊர் மக்களும்.